13 நாட்டின் சட்டத்தின் பிரகாரம் கொண்டு வரப்படும் – ஜனாதிபதி
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய நாட்டில் தற்போதுள்ள சட்டத்தை அமுல்படுத்த கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். இல்லையேல் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தின் ஊடாக நீக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பாரளுமன்ற உறுப்பினரும் 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். பெரும்பான்மைக்கு விருப்பமில்லையென்றால் அமுல்படுத்த மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவவாறாயினும், நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு தாம் தயாரில்லை எனவும், சிங்கள தேசத்தை ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, 09வது பாராளுமன்றத்தின் 03வது அமர்வை இன்று நள்ளிரவுடன் முடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, 09ஆவது பாராளுமன்றத்தின் 04ஆவது அமர்வு பெப்ரவரி 8ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றம் புதிய அமர்வை ஆரம்பிக்கும் போது ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையை முன்வைப்பது மரபு.
இதன்படி, 75வது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் நாட்டில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கொள்கைகள், புதிய சட்டங்கள் மற்றும் சட்டங்கள் தொடர்பான ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை உள்ளடக்கப்படவுள்ளது.
2023-2048 காலப்பகுதியில் சுதந்திர நூற்றாண்டு விழா வரை நாட்டின் முன்னேற்றத்திற்காக கட்சி, நிற, இன வேறுபாடு இன்றி அமுல்படுத்த வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பான கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments: