களத்தில் 11 பேரும் ஜடேஜாவாக இருந்தால் நன்றாக இருக்கும் - தீபக் சாஹர்


ஜடேஜா உலகத்தரம் வாய்ந்த பீல்டர். களத்தில் 11 பேரும் ஜடேஜாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என தீபக் சாஹர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகத் துவக்க ஓவர் வீசியதீபக் சாஹர், ஓபனர் மயங்க் அகர்வாலை கிளின் போல்ட் ஆக்கினார். அடுத்து மூன்றாவது ஓவரில், பீட்டிங் செய்துகொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாகச் செயல்பட்டு கே.எல்.ராகுலை மின்னல் வேகத்தில் ரன்-அவுட் ஆக்கினார். இதனால், துவக்கத்திலேயே ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சாதகமாகத் திரும்பியது.

அடுத்துக் களமிறங்கிய கிறிஸ் கெய்ல் அடித்த பந்தை, பேக்வேர்ட் பாய்ண்டில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா பறவைபோல் பறந்து கேட்ச் பிடித்தார். தொடர்ந்து ஷாருக்கானை தவிர மற்ற பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 106/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. தீபக் சாஹர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

எளிய இலக்கை துரத்திய சிஎஸ்கே 15.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை தீபக் சாஹர் தட்டிச் சென்றார். அதன்பிறகு பேசிய தீபக் சாஹர், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை புகழ்ந்து பேசினார்.

தீபக் சாஹர் பேட்டி:

“முதல் ஓவரில் கெய்ல் அடித்த பந்தை பேக்வேட் பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் தவறவிட்டார். இதனால், அடுத்து அந்த இடத்தில் ரவீந்திர ஜடேஜாவை நிறுத்தினேன். நான் மூன்றாவது ஓவர் வீசியபோது கெய்ல் அதே ஷாட் அடித்தார். அப்போது பேக்வேர்ட் திசையில் நின்றிருந்த ஜடேஜா அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். அந்த கேட்சை ஜடேஜாவை தவிர வேறு யாராலும் பிடிக்க முடியாது. என்னுடைய பந்துவீச்சில் ஜடேஜா அதிக கேட்ச்களை பிடித்திருக்கிறார். அதனால், நான் பந்துவீசும்போது 11 பேரும் ஜடேஜாவாக இருந்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

No comments: