கொரோனா தொற்று - நேற்றைய தினம் 4 மரணங்கள் பதிவு
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 47 வயதான ஆணொருவர் கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் குருணாகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான ஆணொருவரே கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் சிறுநீரக நோய் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 57 வயதான பெண்ணொருவரும் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக சிறுநீரக நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 53 வயதான ஆணொருவர் கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் குருதி விசமடைந்தமை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 670 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 663 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 50,899 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,747 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 6,901 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments: