ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மீண்டும் பிளவு!
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அங்கத்துவப்படுத்தி 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர்.
அவர்களில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, சான் விஜயலால் டி சில்வா, சாரதி துஷ்மந்த, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இவர்கள் ஐவர் தவிர்ந்த அமைச்சு பதவிகளை ஏற்றுக் கொண்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவண்ண, சாமர சம்பத் தசநாயக்க, சுரேன் ராகவன், சாந்த பண்டார, ஜகத் புஸ்பகுமார, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட 9 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றனனர்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் சபை தீர்மானித்துள்ளது. சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் அங்கம் வகிக்கும் குருநாகல் மாவட்டத்தின் சகல உள்ளுராட்சி மன்றங்களிலும் உலங்கு வானுர்தி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன உலங்கு வானுர்தி சின்னத்தில் போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சான் விஜயலால் டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் உலங்கு வானுர்தி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்ட தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: