பெலவத்தையில் வர்த்தகர் கொலை : பரபரப்பு வாக்குமூலம்

கொழும்பின் புறநகர் பத்தரமுதல்ல - தலங்கம பிரதேசத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகர் ஒருவரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரச்சினை ஒன்று காரணமாகவே தொழிலதிபரை கொலை செய்ததாக காவல்துறையினடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் தலங்கம பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது 3 மாடி கட்டடத்தில் இருந்து அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான இந்த வர்த்தகரின் மரணம் தொடர்பில் 27 வயதுடைய ஒருவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காவல்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விசாரணையின் படி, கைது செய்யப்பட்டவரும், கொலை செய்யப்பட்ட வர்த்தகரும் சமூக வர்க்க கழகம் ஒன்றின் அங்கத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வர்த்தகரின் வீட்டுக்கு சென்ற சந்தேகநபர், வர்த்தகரிடம் 100,000 ரூபாவை கேட்டதாகவும், வர்த்தகர் அதனை வழங்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது சந்தேக நபர் தொழிலதிபரை தள்ளிவிட்டு தலையில் தடியால் தாக்கியுள்ளார்.

பின்னர் தொழிலதிபரை நீச்சல் தடாகத்துக்குள் இழுத்து சென்றுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவரின் கைத்தொலைபேசி மற்றும் கடன் அட்டைகளை எடுத்துக்கொண்டு, அவரின் மகிழூந்திலேயே கொலன்னாவையில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இதன் பின்னர் சந்தேக நபரும் அவரது மனைவியும் வர்த்தகரின் மகிழூந்தில் கட்டுநாயக்க நோக்கி பயணித்துள்ளனர்.

தொழிலதிபரின் கடன் அட்டை மூலம் இந்தோனேஷியா செல்வதற்கு இரண்டு விமான அனுமதிச்சீட்டுக்களை பெற்றதாகவும், விசா பெறுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர்களால் வெளிநாடு செல்ல முடியவில்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை 48 மணிநேரம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: