மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது (பா.உ வேலு குமார்)

 (எஸ் சதீஸ்)



மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது. சேவல் கட்சி மலையக மக்களை ஏமாற்றியது. இன்று இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனர்." என கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் விரக்த்தியில் உள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டோம் என்ற வேதனையில் உள்ளனர். 

மலையக மக்கள் அதையும் தாண்டிய கோபத்தில் உள்ளனர். எந்த ஒரு அரசாங்கத்திலும் இடம்பெறாத பாராபட்சம், இந்த அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மொட்டு கட்சி முழு நாட்டையும் ஏமாற்றியுள்ளது. சேவல் கட்சி முழு மலையக மக்களையும் ஏமாற்றியுள்ளது. இன்று இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனர்.

அரசாங்கத்தில் இருந்தால் தான் அனைத்தையும் செய்யலாம் என்றார்கள், அரசியல் பலம் வேண்டும் என்றார்கள், எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களித்து பிரயோசனம் இல்லை என்றார்கள், எம்மால் தான் ரூபா 1000 பெற்றுத்தர முடியும் என்றார்கள். பின்னர் பெற்றுக்கொடுத்தும் விட்டோம் என்றார்கள். பல்கலைக்கழகம் கொண்டு வருவோம் என்றார்கள். 

ஆனால், இறுதியாகவும், மக்கள் வீட்டுக்கு போக சொல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து 1000 ரூபா பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றார்கள். பல்கலைக்கழகம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது என்று அறிக்கை விட்டார்கள். அப்படியாயின் உண்மை என்ன என்பது தெட்டத்தெளிவாகின்றது.

இன்று அரசாங்கம் வேண்டாம் என்கின்றார்கள். அமைச்சு பதவியை ராஜினாமா செய்தோம் அதனால் எங்களுக்கு முதுகெலும்பு இருக்கு என்கின்றார்கள். மக்கள் சொன்னதை செய்தவர்களாக வெளியிலே காட்ட முயற்சிக்கிறார்கள். உண்மையில் நீங்கள் சொன்னது என்ன?, மக்கள் கேட்டது என்ன?

முதுகெலும்பு இருந்திருந்தால்.., 1000 ரூபாவை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும், தோட்டக்காணிகள் மக்களிடம் இருந்து பறிக்கப்படுவதை நிறுத்தியிருக்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட பிரதேச செயலகங்களை உருவாக்கியிருக்க வேண்டும், நாம் ஆரம்பித்து வைத்த தனி வீட்டு திட்டங்களை தொடர்ந்திருக்க வேண்டும், 

மக்கள் கேட்ட விலை குறைப்பை செய்திருக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை தடுத்து நிறுத்த வழி செய்திருக்க வேண்டும், குறைந்த பட்சம் கோதுமை மா சலுகையாவது பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும், அதையெல்லாம் விட்டுவிட்டு, “பதவி துறந்தோம், முதுகெலும்பு இருக்கு” என மார்தட்டிக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது என்றார்

No comments: