கறுப்பு சந்தையில் சமையல் எரிவாயு ? கொட்டகையில் போராட்டம்

 (க.கிஷாந்தன்)


கொட்டகலை நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் நுகர்வோர் இன்று (24.03.2022) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அட்டன் - நுவரெலியா வீதி ஊடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது. சமையல் எரிவாயு விற்பனை நிலையத்தில் இருந்தவர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

நாடாளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், கொட்டகலை பகுதியிலும் தட்டுப்பாடு நிலைமை நீடித்தது. இந்நிலையில் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொட்டகலை நகரம், கிராமம் மற்றும் தோட்டப்பகுதிகளில் உள்ள பலர் சமையல் எரிவாயுவை பெறுவதற்கு வந்திருந்தனர்.

கொட்டகலை நகரில் இரு வர்த்தக நிலையங்கள் ஊடாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது. அதில் ஒரு கடையில் லிட்ரோ கேஸ் ஒன்று சுமார் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

“ லாப் கேஸின் விலை அதிகரித்துள்ளபோதிலும் லிட்ரோ கேஸின் விலை இன்னும் அதிகரிக்கப்படவில்லை. எனவே, 75 வீத விலை அதிகரிப்புடன் எதற்காக லிட்ரோ கேஸ் விற்பனை செய்யப்பட வேண்டும்.” என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தியாவசிய தேவையுள்ள சிலர் அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை பெற்றுச்சென்றுள்ளனர். எனினும், ஏனையோர் முறையற்ற விலை அதிகரிப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு, தமக்கு நியாயம் வேண்டும் என வாதாடியுள்ளனர். சம்பவ இடத்துக்கு ஊடகவியலாளர்கள் சென்ற பிறகு, வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு, வர்த்தகர் சென்றுள்ளார்.

மற்றைய வர்த்தக நிலையத்தில், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டவர்களுக்குதான் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது தமக்கு தேவையானவர்களுக்கு மட்டும் அதிக விலைக்கு வழங்கப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் கொதிப்படைந்த நுகர்வோர், பிரதான வீதியில் இறங்கி போராடினர். தமக்கு நீதி வேண்டும், நியாயமான விலையில் சமையல் எரிவாயு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர். மூடப்பட்ட வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகரிடம் கோரிக்கை விடுத்தனர். பட்டியல் விலைக்கே சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு பணிப்புரை விடுத்தனர். அதிக விலையை பெற்றவர்களுக்கு, மேலதிக கொடுப்பனவை மீள வழங்குமாறும் வலியுறுத்தினர்.

நுகர்வோர் வீதிக்கு இறங்கியதால் சுமார் ஒரு மணிநேரம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொலிஸாரின் தலையீட்டுடன் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.

No comments: