காரைதீவு துப்பாக்கி சூட்டு விவகாரம் - தேரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

 (கனகராசா சரவணன்)


அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் பதுங்கியிருந்த இடத்தை பொலிசார் முற்றுகையிட்ட அவர்களை மடக்கிபிடிக்க முற்பட்டபோது அவர்கள் பொலிசார் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த கொள்ளையன் ஒருவன் மற்றும் பௌத்ததேரர் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்துள்ளதுடன் ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ள சம்பவம் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகள் உடைத்து சுமார் 30 பவுண் தாலிக் கொடிகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் தொடர் கொள்ளையாக டிசம்பர் 18ம் திகதி அதிகாலை 2 மணியளவில் நீதவான் ஒருவரின் வீட்டை உடைத்து 12 பவுண் தங்க ஆபரணம் கொள்ளையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நீதவான் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் ஏனைய கொள்ளை சம்பவங்கள் தொடர்பான கொள்ளையர்களை கைது செய்வதற்காக 4 விசேட பிரிவுகளை கொண்ட பொலிஸ் குழுவினை அமைத்து இந்த கொள்ளையர்களை பொலிசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக சம்பவதினமான நேற்று இரவு 10 மணிக்கு இந்த பொலிஸ் குழுவிற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சப் இன்பெக்கடர் கசீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியை முற்றுகையிட்டனர். 

இதன் போது இரு தேரர்கள் கொள்ளையர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது பிரதான கொள்ளையனை பொலிசார் மடக்கி பிடித்த பொலிசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டபோது அது குறிதவறி பொலிசார் மடக்கிபிடித்த பிரதான சூத்திரதாரியான அக்கிரம் கொள்ளையன் மீது பட்டதையடுத்து அவன் படுகாயமடைந்ததையடுத்து அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதையடுத்து 5 கிராம் ஜஸ் போதை பொருளுடன் படுகாயமடைந்த கொள்ளையன் இரு பௌத்த தேரர்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்ட இரு பௌத்த தேர்களும் தமண பகுதியிலுள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இந்த கொள்ளையர்களுடன் சேர்ந்து புதையல் தோண்டும் நடவடிக்கையினை நீண்ட காலமாக ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று இரவு கொள்ளையர்களை சந்திப்பதற்காக இருவரும் கார் ஒன்றில் வெட்டுவாய்கால் பகுதிக்கு வந்து காத்திருந்தனர்.

இதன் போது அங்கு பிரதான கொள்ளையனான அக்கிரம் மற்றும் மட்டக்களப்பைச் சோந்தவரும் திருக்கோவில் திருமணம் முடித்துள்ள சத்தியா ஆகிய இருவரும் மோட்டர்சைக்கிளில் ஒன்றில் சென்று காத்திருந்த தேரர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது அவர்களை பொலிசார் சுற்றிவளைத்து மடக்கி பிடிக்க முற்பட்டபோது பொலிசார் மீது கொள்ளையனான சத்தியா துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு அவனுடன் தேரர்களின் சாரதி ஆகிய இருவரும் தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதில் கொள்ளையரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த கொள்ளையன் அக்கிரம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவனுடன் இரு தேரர்கள் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதுடன் கார் ஒன்றும் மோட்டர்சைக்கில் ஒன்றையும் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: