நயவஞ்சக அரசியலை றவூப் ஹக்கீம் செய்து கொண்டிருக்கிறார் -அதாஉல்லா எம்.பி



(எஸ்.அஷ்ரப்கான்)

வாக்குகளுக்காக இனவாதத்தை பேசிக்கொண்டு நயவஞ்சக அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் செய்து கொண்டிருக்கிறார்

என தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நேற்று (31) இரவு நடைபெற்ற விளாஸ்டர் விளையாட்டுக்கழக வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

கல்முனையில் தமிழர்களுக்கும் முஸ்லிங்களுக்கும் பிரச்சினை என்றால் படம் காட்ட முடியாது. பேசித்தீர்க்க வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றோர்களுடன் ரவூப் ஹக்கீம் நெருங்கிய நீண்டகால உறவை கொண்டுள்ளார். அந்த நல்ல உறவை கொண்டு கல்முனை பிரச்சினை, மூதூர், தோப்பூரின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதா? அவரது உறவினால் வாழைச்சேனை பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாதா? நாடகம் நடித்துக்கொண்டு

இந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் இவர்களை பற்றி நன்றாக தெரியும். அரசியலை சீராக்க தலைவர் அஷ்ரபின் தலைமையில் ஒன்று சேர்ந்த கூட்டம் நாங்கள். அதில் ஒருவராக இருந்து அடுத்தகட்டங்கள் தொடர்பில் கடும் தெளிவுடன் இருக்கிறோம். இந்த ஆண்டில் நிறைய வடுக்கள் இருந்தது. புதிய ஆண்டில் வடுக்கள் இல்லாமல் நம்மை வாழவைக்கும் ஆண்டாக மலரவுள்ள புத்தாண்டு இருக்க வேண்டும்.

நாட்டில் பஞ்சமில்லாத நிலை உருவாகி சிங்கள,தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒருதாய் பிள்ளைகள் போல இனவாதம் இல்லாமல் ஒற்றுமையாக வாழ இந்த ஆண்டு பிறக்கவேண்டும் என்று பிராத்திக்கிறேன். ஆட்சி அதிகாரம் என்பது சில காலங்கள் மட்டுமே இருக்கும் அந்த காலப்பகுதியில் மக்களுக்கு எதைசெய்தோம் என்பதை மனசாட்சியுடன் செய்ய வேண்டும். 

இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். பிரதேச மீனவர்களின் அவசர தேவையாக உள்ள பின்பிடித்துறைமுகம் என்பது புரிந்துணர்வில்லாத அரசியல்வாதிகளினால் சாத்தியப்படாமல் தள்ளி நிற்கிறது. இதனால் மீனவர்கள் கடுமையாக கஷ்டப்படுகிறார்கள். ஊருக்கே சோறுபோடும் விவசாயிகள் கடுமையான இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அதினிலிருந்து விடுபடச்செய்வது தொடர்பில் சிந்திப்போம்.

எமது பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி கல்வியதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், பெற்றோர்கள் என பலரும் ஒன்றிணைந்து சரியாக திட்டமிடுவதன் மூலம் கல்வி முன்னேற்றத்தில் வெற்றியடையலாம் என்றார்.

No comments: