பயணத்தடை நாளை தளர்வு ? அடையாள அட்டை முறை அமுல் !


நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.


இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, நாளைய தினம் முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், ஒற்றை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும்.

பூச்சியம் எனின் அது இரட்டை எண்ணாக கருதப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் 17ஆம் திகதி என்பதனால், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டவர்கள் மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

இந்த முறைமையை மீறுகின்றவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலுக்கு செல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

ஏனைய செயற்பாடுகளுக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக அடையாள அட்டை முறைமையை பின்பற்ற வேண்டும்.

நாளை (17) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த முறைமை அமுலில் இருக்கும்.

அவ்வாறானால், குறித்த 14 நாட்களில், அடையாள அட்டை முறைமையின் அடிப்படையில், ஒருவருக்கு 7 நாட்கள் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: