29 பேருக்கு கொரோனா தொற்று - நோர்வூட் இன்ஜெஸ்ட்ரி பகுதி முடக்கம்

க.கிஷாந்தன்


நோர்வூட் இன்ஜஸ்ட்ரி கிராம அலுவலகர் காரியாலயத்திற்கு உட்பட்ட தோட்ட பகுதிகள் இன்று (03) பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

நோர்வூட் ஹொன்சி பகுதி, இன்ஜஸ்ட்ரி, பாத்போட் பிரிவு, பிரட், பிலின்கிபோனி மற்றும் அபகனி, ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆம் திகதி புளியாவத்தை பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஒன்றில் 180 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இன்ஜஸ்ட்ரி தோட்டத்தில் 19 பேருக்கும், என்பீல்ட் தோட்டத்தில் 5 பேருக்கும் போடைஸ் தோட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 29 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.




No comments: