ரிஷப ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்


பிலவ தமிழ் வருடம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. 

மங்களகரமான பிலவ தமிழ் புது வருடம் சித்திரை 1ஆம் தேதி புதன்கிழமை சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. 

பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 

பிலவ ஆண்டில் கிரகங்களின் சஞ்சாரமும் பார்வையும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்தோஷங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் ராஜ கிரகங்கள் சூரியன், சுக்கிரன், சந்திரன் கூடியுள்ளன. ராசிக்கு 10ல் குரு, ஒன்பதாம் வீட்டில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். ராசியில் ராகு பயணிக்க செவ்வாய் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஏழாம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார். ஆண்டு முழுவதும் கிரகங்களின் பயணம் உங்கள் ராசிக்கு சாதகமாகவே உள்ளது. 

ரிஷப ராசிக்காரர்களுக்கு பிலவ வருடம் அதிசயங்களை நிகழ்த்தப்போகிறது. அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டு அல்லல்பட்ட உங்களுக்கு ஜென்ம ராகு இப்போது சில பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொழில் நெருக்கடி குடும்பத்தில் பிரச்சினை என சந்தித்து வந்த நீங்கள் இனி சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கப் போகிறது.

*குடும்பத்தில் குதூகலம் 

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், புதன், சூரியன் இணைந்து 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. நிறைய பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். உங்களின் மனம் தெளிவடையும். வீட்டில் சந்தோஷம் குடியேறும். சூரியனும் புதனும் இணைந்து 12ஆம் வீட்டில் இணைந்திருப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷம் குடியேறும். கணவன் மனைவி இடையே அன்பும் நெருக்கமும் கூடும்.

*பண வரவு அதிகரிக்கும் 

பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். தனம் பெருகும், வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். பேசும் போது நிதானம் தேவை. தன்னம்பிக்கை தைரியம் கூடும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். புதிய தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யலாம் லாபம் கிடைக்கும். பண வருமானம் அதிகரிப்பதால் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

*புத்திரபாக்கியம் 

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நன்மை கிடைக்கும். புது வீடு கட்ட ஆரம்பிக்கலாம். புது வண்டி வாங்க யோகம் வந்துள்ளது. திருமணம் முடிந்து புத்திரபாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புத்திர தோஷம் விலகி மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வந்து விட்டது.

*காதல் திருமணம் கைகூடும் 

இல்லற வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். பிரிந்து சென்ற தம்பதியர்கள், காதலர்கள் ஒன்றிணையும் காலம் வந்து விட்டது. காதல் திருமணம் கைகூடி வரப்போகிறது. பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் நீங்கும் என்றாலும் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் போது விழிப்புணர்வு தேவை. பாக்ய ஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்றிருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

*பொருளாதார வரவு பத்தில் குரு சஞ்சரிப்பதால் வேலையில் கவனமாக இருக்கவும். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு வேலை மாற்றம் கிடைக்கும். பொருளாதார வரவு அதிகம் இருந்தாலும் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் கவனம் தேவை.

*மன அமைதி வரும் 

சூடான வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள். ராசி நாதன் சுக்கிரன் 12ஆம் வீட்டில் இருந்தாலும் வருமானம் அதிகரிக்கும் அதை மீறிய செலவுகள் வரும். பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும் இல்லாவிட்டால் கடன் சுமை உண்டாகும். உங்கள் தேவைக்கு ஏற்ற செலவுகளை மட்டும் செய்யவும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும். புத்தாண்டு நாளில் ஆலய தரிசனம் செய்வது மன அமைதியைக் கொடுக்கும்.

*பரிகாரம்

இந்த பிலவ வருடம் உங்களுக்கு திருப்புமுனைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. முன்னேற்றங்களும் சந்தோஷங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போது கவனமாக இருக்கவும். மன ரீதியாக சில பிரச்சினைகள் வரலாம் தியானம் பழகவும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

No comments: