பொகவந்தலாவ பகுதியில் மேலும் இருவருக்குக் கொரோனா - இதுவரை 35 தொற்றாளர்கள் அடையாளம்

பொகவந்தலாவ நிரூபர்.சதிஸ்


பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் மத்தியப் பிரிவில் ஒருவருக்கும், பொகவந்தலாவ 
லொய்னோன் தோட்டப் பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

18.12.2020  வெள்ளிக்கிழமை மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையினூடாக குறித்த இரண்டுத் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 

பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் பகுதியில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர், வத்தள ஹனுபிடிய பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து கடந்த மூன்றாம் திகதி குடும்பத்துடன் பொகவந்தலாவுக்கு        வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குடும்பத்தினரை 14 நாட்கள்
சுயதினமைப்படுத்தப்பட்டிருந்த வேளை, கடந்த 15ஆம் திகதி குறித்த நபருக்கு
பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் நுவரெலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. 

தொற்றுக்குள்ளான நபர் நேற்றைய தினம் 18.12.2020 பொகவந்தலாவ நகரத்தில் உள்ள சிகையலங்கார நிலையத்திற்கும், டியன்சின் நகரில் உள்ள மதுபானசாலைக்கும் சென்று வந்துள்ளதாக  பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரோடு, தொடர்பினைப் பேணிவந்தவர்கள் 14 நாட்களுக்கு
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவ நகரத்தில் சிகையலங்கார நிலையத்தினை மூடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளர் கொழும்பு பம்பலப்பிடி பகுதியிலிருந்து வந்தவராவார்.

இவருடன் தொடர்பினைப் பேணி வந்தவர்களையும் சுயதனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை இனங்காணப்பட்ட இரண்டுத் தொற்றாளர்களும் லக்கல பல்லேகல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு சுகாதாரப் பாதுகாப்போடு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: