மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கியவர்கள் கைது


(கனராசா சரவணன்)

ஊரடங்கு சட்ட அமுலில் உள்ள போது சுவிஸ் நாட்டிலுள்ள தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகம் அமைப்பின் பதாதையுடன் கற்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கான நிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் உதவித்திட்டத்தின் கீழ் சுவிஸ் தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின் அனுசரனையுடன் கற்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்ட உணவுப் பொதி வழங்கள் என பொறிக்கப்பட்ட பதாதையுடன் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் கடந்த மாதம் 18 ம் திகதி ஊரடங்கு சட்ட அமுலிலுள்ள போது நிவாரண பொதிகளை 6 பேர் வழங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அங்கு சென்ற இராணுவத்தினர் இவர்களை ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட கொரோனா சுகாதார முறைகளை பின்பற்றாமல் செயற்பட்ட மற்றும் குறித்த பதாதையின் ஆஞ்சனையில் தமிழீழம் வரை படம் பொறிக்கப்பட்ட படம் கொண்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பதாதையை பயன்படுத்தி செயற்பட்டுள்ளர்கள் என்ற சந்தேகத்தில் மட்டக்களப்பு நகர் பகுதியைச் 6 பேரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது கடந்த 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அதன் பின்னர் 29 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் யூன் 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments: