எண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. 

நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம் எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு. ஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். 

எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.

குணநலன்கள்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப்பெற்றிருப்பார்கள். கலா ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் தமக்குத் தெரிந்த விஷயம் போலவே காட்டிக் கொள்வார்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள்.

எதையுமே தனக்கு பிடித்த மாதிரிதான் செய்ய வேண்டுமென்ற பிடிவாத குணம் இருக்கும். வெகுளியாகவும் கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவார்கள். வாத பிரதிவாதங்களில் திறமையோடு வாதித்து தனது அபிப்ராயத்தை அங்கு நிலைநாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். 

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து அவர்களுக்கு உதவி செய்வார்கள். தனது அந்தஸ்துக்கும் புகழுக்கும் பழுது ஏற்படாத பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். மன அமைதியை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் அதை பிறருக்கு தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்கள்.

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயற்கையிலேயே அஞ்சா நெஞ்சமும் தைரியமும் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் காரியவாதிகள். ஆதலால் வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். 

இவர்களது சுயேட்சையான சுபாவத்தையும், அகங்கார குணத்தையும் கண்டு இவர்களை நேசிப்பவர்கள் கூட சில சமயம் வெறுப்படைந்து விடுவார்கள். பெரியவர்களிடத்தில் மரியாதையும், சிறியவர்களை அடக்கியாளும் குணமும் இருக்கும். மற்றவர்களின் குற்றம் குறைகளை கண்டு பிடித்து அம்பல மாக்குவதில் தனிக்கவனம் செலுத்துவார்கள். இவர்களை துணையாக கொண்டால் எந்தக் காரியத்திலும் எதையும் சாதித்த வெற்றி பெறமுடியும்.

உடல் நிலை ஆரோக்கியம்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், சுருட்டையான தலைமுடியும் இருக்கும். பார்ப்பதற்கு வெகுளியாகக காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். நீண்ட மூக்கும் அடர்த்தியான பல் வரிசையும் கொண்டவர்கள். 

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாதலால் இவர்களுக்கு பெரும்பாலும் உடலில் காயங்கள், இரத்தக் கசிவுகள் போன்றவை ஏற்படக்கூடும். உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். முடிந்தவரை மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்தால் உடல் நிலை சிறப்பாக அமையும்.

குடும்ப வாழ்க்கை

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதில் பாதிப் பேருக்கு சுகமான சுபிட்சமான வாழ்க்கையும், வாழ்க்கை துணையால் முன்னேற்றங்கள் போன்றவை அமைந்தாலும் பாதிப்பேருக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களும் குழப்பங்களும் உண்டாகிறது. இதனால் விரக்தியான மனோநிலைகளும் ஏற்படுகிறது. இதனால் எதையும் சிந்தித்து சரியான முறையில் அனுசரித்து நடந்தால் மட்டுமே நற்பலனைப் பெற முடியும். 

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தாயின் ஆதரவு அவ்வளவாக கிடைப்பதில்லை. உடன் பிறந்தவர்கள் மீது இவர்களுக்கு பாசம் அதிகம் இருந்தாலும் அவர்களால் ஒரு பிரயோசனமும் உண்டாவதில்லை. இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்ப வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

பொருளாதார நிலை

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் சகல வசதிகளையும் பெற்று சுக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு தேவைக்கேற்ப பணவசதி ஏற்படுமே தவிர சேமிக்கும் அளவிற்கு இருக்காது. வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும். வாழ்க்கையின் முற்பாதியில் பொருளாதார நிலையில் சங்கடங்கள் இருந்தாலும் பிற்பாதியில் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வார்கள். 

மனைவி வழியில் ஒரு சிலருக்கே பொருளுதவிகள் கிடைக்கும். வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்யக்கூடிய வாழ்க்கை இணை அமைந்த போதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தங்களுக்கு தேவைற்ற கடன்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். பெரும்பாலும் தங்களுடைய கௌரவத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள எப்பாடுபட்டாவது சம்பாதித்து முன்னேறி விடுவார்கள்.

தொழில்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழிலை ஏற்றுக் கொண்டாலும் அதை திறம்பட நிர்வாகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய உயர் பதவிகளை கிடைக்கும். 

பலர் ஆயுதங்களை தாங்கி பணி செய்யக்கூடிய மிலிட்டரி, போலீஸ் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மற்றும் தீயுடனும், மின்சாரத்துடனும் தொடர்பு கொண்டதுறைகளிலும் பணிபுரிவார்கள். போர்க்கலைகள், மல்யுத்தம், மலையேறுதல், விளையாட்டுத் துறைகளில் பயிற்றுவிக்கும் பணி போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய பணியாக இருந்தாலும் துணிச்சலுடன் செய்வித்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்று விடுவார்கள். சிலர் மருத்துவ துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்குவார்கள்.

நண்பர்கள், பகைவர்கள்

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் வீரத்தின் சின்னமாக விளங்குகிறார்கள். இவர்களுக்கு அதிகார தோரணையும்,பிறருக்கு ஆடிபணியாத குணமும் இருக்கும் என்றாலும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய குணமும் உண்டு. இவர்களது அதிகார குணம் மற்றவர்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் போற்றுவதற்கு பதில் தூற்றுவற்குரியதாக இருக்கும். என்றாலும் இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் இவர்கள் அவ்வளவு எளிதில் மயங்கி விடுவதில்லை. இவர்களுக்கு 1,2,3 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். 4,5,7 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் ஒத்தப்போகமுடியாது.

No comments: