திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாகி சூட்டு சம்பவம் 3 பொலிசார் உயிரிழப்பு


கனகராசா சரவணன்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசார்
மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 பொலிசார் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாகவும் துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சாஜன் தப்பி ஓடிய நிலையில் மொன்ராகலையில் வைத்து கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் கான்ஸ்டபிள்களான நவீனன், துசார, பிரபுதன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மென்ராகலையைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் குமார என்பவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் லீவு கோரியுள்ளார். 

 இந்த நிலையில் அவருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்கம லீவு வழங்காததையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ரி 56 துப்பாக்கியால் பொலிஸ்சாஜன் சரமாரியாக துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிசார் உயிரிழந்ததுடன் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 3 படுகாயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையில் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சாஜன் அங்கிருந்து மோட்டர்சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில் மொன்ராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்துள்ளார்.

இது தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

அதேவேளை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் துப்பாக்கி சூட்டு சத்தத்தையடுத்து பெரும் பயப்பீதியடைந்துள்ளதையடுத்து அந்த பகுதியில் இராணுவத்தினர் பொலிசார் குவிக்கப்பட்டு பிரதான சந்திகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிசாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுவருகின்றனர் குறிப்பிடத்தக்கது---


No comments: