(திருக்கோவில் ) - பலவந்தமாக துப்பாக்கியை பறித்த சாஜன் நடந்தது என்ன ? 14 நாட்கள் விளக்கமறியல்
(கனகராசா சரவணன்)
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று சனிக்கிழமை (25) உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
குறித்த பொலிஸ் நிலையத்தில் சமார் 30 பொலிசார் கடமையாற்றிவருகின்றனர் இந்த நிலையில் இங்கு கடமையாற்றிவரும் மொன்ராகலை மாவட்ட சியம்பலாண்டுவ அத்திமலை பொலிஸ் பிரிவில் வசித்துவரும் பொலிஸ் சாஜன் குமார என்பவர் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான தெயகமவிடம் அனுமதி கோரியிருந்தார் அதற்கான அனுமதியை அவர் வழங்கவில்லை.
இந்த நிலையில் வீடு செல்ல லீவு வழங்காததையடுத்து சாஜனான குமார கடுமையான கோபத்தில் இருந்துள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் சம்பவதினம் இரவு இடம்பெற்ற கிறிஸ்மஸ்பாட்டியில் கலந்துகொண்டு பாட்டி முடிந்து அங்கிருந்து சென்றனர்.
அதனையடுத்து இரவு சுமார் 11 மணியை நெருங்கி கொண்டிருந்தபோது குறித்த சாஜன் பொலிஸ் நிலைய முன்பகுதி வாசலில் கடமையில் இருந்த ஒருவரின் ரி 56 ரக துப்பாக்கியை பலவந்தமாக பறித்தெடுத்து ஆகாயத்தை நோக்கி துப்பாகி பிரயோகம் செய்தார்.
பின்னர் அதனை தொடர்ந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் காரியாலய கட்டிடபகுதியை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோது அங்கு கடமையில் இருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து வீதி சோதனை நடவடிக்கையினை பார்ப்பதற்காக அவரது சாரதியுடன் ஜீப்வண்டியில் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீண்டும் பொலிஸ் நிலையம் நோக்கி ஜீப்வண்டியில் உள்நுழைந்த போது ஜீப் வண்டியை நோக்கி துப்பாகிதாரியான பொலிஸ் சாஜன் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சாரதி உயிரிழந்ததையடுத்து ஜீவ்வண்டி அருகில் இருந்த கட்டிடத்தில் மோதிநின்றது .
இதனையடுத்து அங்கு இருந்த பொலிசார் தமது உயிரை காப்பாற்ற அங்கிருந்து சின்னா பின்னமாக தப்பி ஓடி கட்டிடங்களில் கதவுகளை பூட்டி மறைந்து கொண்டனர் இதன் பின்னர் துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுவந்த பெலிஸ் சாஜன் அங்கிருந்த இன்னுமொரு துப்பாக்கியையும் எடுத்து கொண்டு சிறியரக (பட்டா) வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
துப்பாக்கி வேட்டுசத்தம் அடங்கியதையடுத்து மறைந்திருந்த பொலிசார் வெளியேறிபோது தம்மோடு கடமையாற்றிவந்த 3 பொலிசார் துப்பாக்கி சூட்டுகாயத்துடன் உயிரிழந்து இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்ததையடுத்து அதிர்ச்சியடைந்ததுடன் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அனைவரையும் அருகில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களான சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய டி.எம்.துசார ,கேமந்த புஸ்பகுமார, கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த 30 வயதுடைய அழகரெட்ணம் நவீனன், பிபிலையைச்; சேர்ந்த 30 வயதுடைய பிரபுத்த என்பவர்களே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனா. இதில படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கலந்தர் லெப்பை முகமட் காதர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அங்கிருந்து மோட்டர்சைக்கிளில் தப்பி ஓடிய பொலிஸ் சாஜன் மொன்ராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியுடன் சரணடைந்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்துள்ளார்.
குறித்த சம்பவ இடத்துக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பொலிசார் அம்பாறை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளர்.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments: