கொரோனா தொற்று-மரணங்களின் எண்ணிக்கை 264 ஆக உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,076 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 763 பேர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 747 பேருக்கும், சிறைக்கைதிகள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், லெபனானில் இருந்து நாடு திரும்பிய 11 பேருக்கும், இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த 14 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 425 பேர் குணமடைந்து நேற்று வீடுதிரும்பியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,171 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7,627 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் எண்மர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 13ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், உடபுஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 15ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தாக்கம் மற்றும் நுரையீரல் நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 87 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி அதிகரித்தமை மற்றும் இருதய நோய் தாக்கம் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் இருதய நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில், கடந்த 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கல்லீரல் நோய் தாக்கம் அதிகரித்தமை, இரத்தம் விஷமடைந்தமை மற்றும் கொரோனா தொற்று ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு 8 பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில், கடந்த 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக இரத்தம் விஷமடைந்தமை மற்றும் பல்வேறு உறுப்புகள் செயலிழந்தமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், உடுதும்பற பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக மூச்சுக் கோளாறு, கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் இருதய நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 264 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: